தலைப்பை பார்த்து இது SJ சூர்யாவின் திரைப்படம் பற்றியது என்று யாரும் தயவு செய்து பதற வேண்டாம். நேற்று நான் படித்த திரு கல்கி அவர்களின் கள்வனின் காதலி புதினத்தை பற்றியோரு சிறு குறிப்பே. பொன்னியின் செல்வனையும், சிவகாமி சபதத்தையும் படித்தபின் இப்புதினத்தை படித்தால் நிச்சயம் என்னை போல் அனைவரும் ஏமாற்றம் அடைவீர்கள்.
இது சரித்திரப்புதினம் அன்று சமூகப்புதினம். கல்கி அவர்களின் நடையிலும், அவர் பாத்திரப்படைப்பிலும் சிறு குறையுமில்லை. இக்கதை கல்கி அவர்கள் வாழ்ந்த காலத்தில் நடப்பதால் (சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்) நாம் இக்கதையோடு அவ்வளவாக ஒன்ற முடிவத்தில்லை. பொன்னியின் செல்வனில் பல கதாபாத்திரங்களோடு விளையாடிய கல்கி அவர்களுக்கு இதில் உள்ளதோ பத்திற்கும் குறைவான கதாபாத்திரங்கள், அதில் மூவரை மட்டுமே கதை சுற்றி வருகிறது.
இதில் காவல் அதிகாரியாய் வரும் சாஸ்த்ரி கதாப்பாத்திரம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, ஆனால் கமலபதி கதாப்பாத்திரம் அவ்வளவு அழுத்தமாக அமைக்கப்படவில்லை.
கல்யாணியோ சில இடங்களில் சிறப்பாகவும் சில இடங்களில் குழப்பமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. முத்தையன் துடிப்பும் வீரமும் உள்ள கல்கியின் வழக்கமான கதாநாயகன் பாத்திரம் ஆனால் புத்திசாலித்தனம் மட்டும் சிறுதும் இல்லாமல் போனது ஏனோ? வழக்கம் போல இதிலும் கல்கி காதலர்களை இறுதி வரை போராட விட்டு தோல்வியடைய வைக்கிறார்.
இக்கதை நாம் 50 வருடம் முந்தியோ அல்லது கல்கி பற்றி தெரியாமல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படித்தால் ஒரு வேலை சிறப்பாக தோன்றலாம்.